Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல்; உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும்: பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை

பாரிஸ்: ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், இதன் மூலம் உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும் என்று பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் பி-2 ரக போர் விமானங்கள், சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி இரண்டு அணு உலைகளையும், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவப்பட்ட டோமாஹாக் ஏவுகணைகள் மூன்றாவது அணு உலையையும் தாக்கின.

இந்தத் தாக்குதல் மிகப்பெரிய ராணுவ வெற்றி என்றும், ஈரானின் அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமிதத்துடன் அறிவித்தார். ஆனால், அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முழுமையாக அழிக்கவில்லை என்றும், சில மாதங்களுக்கு மட்டுமே தள்ளி வைத்துள்ளது என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த தாக்குதல்கள் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அளித்த பேட்டியில், ‘அமெரிக்காவின் தாக்குதல்கள் திறம்பட இருந்தாலும், இதன் மூலம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேறினால் அதுவே மிக மோசமான சூழலை உருவாக்கும்.

அவ்வாறு நடந்தால், அது உலக நாடுகளுக்கு பேரழிவை ஏற்படுத்தும். இந்த ஒப்பந்தத்தைக் காப்பாற்றும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் அடுத்த சில நாட்களில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். ஏற்கனவே இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசினேன். மீண்டும் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபடுவதைத் தடுப்பதே தற்போதைய முக்கிய நோக்கம்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.