லண்டன்: இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது. லண்டனில் பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டாமர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. வரியற்ற ஒப்பந்தம் கையெழுத்தானதால் இரு தரப்பு வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.2.4 லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான வரியற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் 90% வர்த்தகத் தடைகள் நீக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக சிறந்த உறவுகள் நீடித்து வருகின்றன. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். இதன்படி நேற்று லண்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை இன்று பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இங்கிலாந்து இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கெய்ர் ஸ்டார்மரை தொடர்ந்து இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.