Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மோடி வெளிநாட்டில் இருந்த நேரத்தில் அதிகார வரம்பை ஜெகதீப் மீறினாரா?.. மாநிலங்களவை செயலர் நியமனத்தின் பகீர் பின்னணி

புதுடெல்லி: பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்த நேரத்தில் தனது அதிகார வரம்பை ஜெகதீப் தன்கர் மீறி செயல்பட்டதால் மாநிலங்களவை செயலர் நியமனம் ரத்து செய்யப்பட்டதாக பகீர் பின்னணி தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது உடல்நிலையை காரணம்காட்டி, தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அவரது இந்த திடீர் முடிவின் பின்னணியில் பெரும் அரசியல் புயல் வீசுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தபோது, ஜெகதீப் தன்கர் தன்னிச்சையாக எடுத்த ஒரு முக்கிய முடிவுதான் இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடி, ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலிக்குச் சென்றிருந்த நேரத்தில், அப்போதைய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மாநிலங்களவையின் புதிய பொதுச் செயலாளராக சத்ய பிரகாஷ் திரிபாதி என்பவரை நியமித்து உத்தரவிட்டார். ஒன்றிய அரசின் உயர் மட்டத்திலோ அல்லது சம்பந்தப்பட்டவர்களிடமோ உரிய ஆலோசனை நடத்தாமல், மிகவும் தன்னிச்சையாகவும், அவசரமாகவும் இந்த நியமனத்தை அவர் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை, ஆளும் பாஜக அரசு மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும் பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து திரும்பிய உடனேயே, இந்த விவகாரம் அவரது கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்ட இந்த நியமனத்தை, அதிகார வரம்பை மீறிய செயலாகவும், தேவையற்ற அரசியலமைப்புச் சிக்கலை உருவாக்கும் முயற்சியாகவும் ஒன்றிய அரசு கருதியது. இதன் விளைவாக, ஜெகதீப் தன்கர் பிறப்பித்த நியமன உத்தரவை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்தது. இந்தச் சம்பவம், ஒன்றிய அரசுக்கும் அவருக்கும் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியதாகவும், இதன் காரணமாகவே அவர் பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இந்த திடீர் ராஜினாமா, தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மாநிலங்களவையின் புதிய பொதுச் செயலாளராக சத்ய பிரகாஷ் திரிபாதி என்பவரை நியமித்து உத்தரவிட்டார். ஒன்றிய அரசின் உயர் மட்டத்திலோ அல்லது சம்பந்தப்பட்டவர்களிடமோ உரிய ஆலோசனை நடத்தாமல், மிகவும் தன்னிச்சையாகவும், அவசரமாகவும் இந்த நியமனத்தை அவர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.