சென்னை: 2025 -26 ம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி – ஏஎச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன.
இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன. பிவிஎஸ்சி – ஏஎச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2025-26ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் https://adm.tanuvas.ac.in ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 26ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை நடந்தது. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியானது. இதில் பி.வி.எஸ்சி. – ஏ.எச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் 6 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200க்கு 200 பெற்று முன்னிலை பெற்றுள்ளனர். இந்நிலையில் 2025 -26 ம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
பொதுப்பிரிவினருக்கான கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு இணையதளம் மூலம் இன்று தொடங்குகிறது. முதல் சுற்று கலந்தாய்வு இன்று www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் நடைபெற இருக்கிறது. நாளை சிறப்பு பிரிவு [மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, விளையாட்டு வீரர்] கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை மறுநாள் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பதிவு மற்றும் கல்லூரி வளாக விருப்பத்தை இன்று முதல் 24ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டுக்கான ஆணைகள் ஜூலை 26ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.