தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிடன் மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது : முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
சென்னை : தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிடன் மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலன் காக்கும் வகையில் 6 சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு .க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிடன் மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,
* தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு
* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
*தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி
*தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
*தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்
*பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி
* தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம்!
இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு! "இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .