போரை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் ரத்தாகும்; தாய்லாந்து-கம்போடியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை: இருதரப்பிலும் 30 பேர் பலி
வாஷிங்டன்: போரை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் ரத்தாகும் என்று தாய்லாந்து-கம்போடியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில், இதுவரை இருதரப்பிலும் 30 பேர் பலியானதாக கூறப்படுகிறது. தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. குறிப்பாக, 817 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையில் அமைந்துள்ள பிரியா விகார் என்ற பழமையான கோயிலின் உரிமை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பெரும் சர்ச்சை நிலவுகிறது.
கடந்த 1962ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம், இந்தக் கோயில் கம்போடியாவிற்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது. இருப்பினும், தாய்லாந்து இந்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், கடந்த மே மாத இறுதியில் கம்போடிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் பன்மடங்கு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து நடந்த கடுமையான மோதல்களில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; தாய்லாந்து தரப்பில் 20 பேரும், கம்போடியா தரப்பில் 13 பேரும் பலியாகியுள்ளனர். மேலும், இந்த மோதல்களால் சுமார் 1,30,000க்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘தாய்லாந்து மற்றும் கம்போடியா தலைவர்களுடன் தனித்தனியாகப் பேசினேன். போரை உடனடியாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து சண்டையிட்டால், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்தாகும் என்று இரு தரப்பையும் எச்சரித்தேன். தாய்லாந்து தரப்பும் கொள்கை அளவில் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாலும், கம்போடியாவிடம் இருந்து அதன் உண்மையான நோக்கம் தேவை’ என்று வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், டிரம்பின் தலையீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெள்ளை மாளிகையோ அல்லது சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களோ இதுவரை வெளியிடவில்லை. பதற்றம் நீடிப்பதால், எல்லையோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என இந்தியத் தூதரகம் தனது மக்களுக்கு பயண ஆலோசனையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.