Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாஜக நெருக்குதலுக்கு பணிந்த ஏக்நாத் ஷிண்டே.. நாளை மராட்டிய முதல்வராக பதவியேற்கிறார் தேவேந்திர பட்னவிஸ்.. !!

மும்பை: தேவேந்திர பட்னவிஸை மராட்டிய மாநில முதலமைச்சராக்க பாஜக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்கள் மேலாகியும் முதல்வர் பதவி யாருக்கு என்பது முடிவாகாததால் பாஜ தலைமையிலான புதிய கூட்டணி அரசு இதுவரை பதவியேற்கவில்லை. இந்நிலையில், வரும் 5ம் தேதி மாலை மும்பையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று பாஜ அறிவித்தது. இந்நிலையில், வரும் 4ம் தேதி மும்பையில் நடக்கும் பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தேவேந்திர பட்னவிஸை மராட்டிய மாநில முதலமைச்சராக்க இன்று நடைபெற்ற பாஜக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் மராட்டிய முதலமைச்சர் தேர்வில் ஒருவாரமாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. மேலும் மும்பை சட்டமன்ற வளாகத்தில் நடந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் சட்டமன்ற கட்சித் தலைவராக பட்னவிஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பா.ஜ.க. மாநில தலைவர் சந்திரகாந்த் படேல், பட்னவிஸ் பெயரை முன்மொழிந்தார். இதையடுத்து, மும்பையில் நாளை நடைபெறும் விழாவில் மராட்டிய முதலமைச்சராக பதவியேற்கிறார் தேவேந்திர பட்னவிஸ். ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலையே ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் தேவேந்திர பட்னவிஸ் என்று செய்திகள் உலா வருகின்றன. முன்னதாக தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தன்னை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் என பாஜகவிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால் ஏக்நாத் ஷிண்டே எதிர்ப்பை மீறி தேவேந்திர பட்னவிஸை முதலமைச்சராக்க பாஜக எடுத்தது. முதலில் முரண்டு பிடித்த நிலையில், தேவந்திர பட்னவிஸ் நேரில் சந்தித்து பேசியதையடுத்து பாஜக முடிவை ஏற்றுக்கொண்டார் ஏக்நாத் ஷிண்டே என்பது குறிப்பிடத்தக்கது. மராட்டிய முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்பார் என்ற அறிவிப்பை அடுத்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.