Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விண்வெளியை நோக்கி பயணம் செய்யும் இந்தியர்: "ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்.." என்று முழக்கமிட்ட சுபான்ஷு சுக்லா..!!

வாஷிங்டன்: விண்வெளிக்கு புறப்படும்போது ஜெய்ஹிந்த், ஜெய்பாரத் என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா முழங்கினார். இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் கடந்த 11ம் தேதி செயல்படுத்தப்பட இருந்தது. இந்த விண்வெளி பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா , ஹங்கேரி, போலந்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் ஏவப்படவிருந்த இந்த பயணம், மோசமான வானிலை, ஆக்சிஜன் கசிவு உள்ளிட்ட பல்வேறு கோளாறு காரணமாக அடுத்தடுத்து 6 முறை ராக்கெட் ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் திட்டமிட்டபடி, இன்று பிற்பகல் 12.01 மணிக்கு புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலமாக டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பால்கன் 9 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த முதல்கட்ட எஞ்சின், பூமிக்கே திரும்பியது. புவிவட்டப்பாதைக்குள் நுழைந்த பால்கன் ராக்கெட், புறப்பட்ட 8 நிமிடங்களில் முதல் கட்டத்தை கடந்தது. நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்கலம் சென்றடையும். இந்த விண்வெளி பயணம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார்.

இந்நிலையில், விண்வெளிப் பயணம் துவக்கத்தின் போது "ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்.." என்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா முழங்கி, தனது தேச பக்தியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பாக பேசிய அவர்; என் அன்பான நாட்டு மக்களே! என்ன ஒரு பயணம். 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விண்வெளியில் இருக்கிறோம். இது ஒரு அற்புதமான பயணம். வினாடிக்கு 7.5 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறோம். என் தோள்களில் பொறிக்கப்பட்ட திரங்கா, நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன் என்று சொல்கிறது. இது என்னுடைய ISS பயணத்தின் தொடக்கம் மட்டுமல்ல, இந்திய விண்வெளிப் பயணத்தின் தொடக்கம். இந்தப் பயணத்தில் நீங்கள் அனைவரும் ஒரு பகுதியாக பங்கேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து இந்திய விண்வெளித் திட்டத்தை தொடங்குவோம். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத் என்று விண்வெளியில் இருந்து மக்களுடன் சுபான்ஷு சுக்லா பேசினார்.