Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு : எடப்பாடி பழனிசாமிக்கு கடும் பின்னடைவு!!

சென்னை : அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் அதிமுக உறுப்பினர் எனக் கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவரும் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சூர்யமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சூர்யமூர்த்தி, அதிமுக உறுப்பினரே அல்ல எனவும், உறுப்பினராக இல்லாத சூர்யமூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக கட்சி விதிகளின் படி உறுப்பினர் அட்டையை வழங்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமே இல்லை; அதிமுக விதிப்படி கட்சியின் பொதுச்செயலாளர் என்பவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; தாம் அதிமுக உறுப்பினர்தான் என சூரியமூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, "கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் எனத் தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்குரியது எனக் கூறி, சூர்யமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.