Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சரஸ்வதி பூஜையையொட்டி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று வாழைத்தார் வரத்து ஓரளவு இருந்தாலும் சரஸ்வதி பூஜையையொட்டி கூடுதல் விலைக்கு விற்பனையானதாக தெரிவித்தனர்.

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் நடக்கும் வாழைத்தார் மொத்த விற்பனையின் போது, சுற்று வட்டார கிராமம் மற்றும் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகிறது.

அதனை, உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் நேரில் வந்து குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி செல்கின்றனர். தென்மேற்கு பருவமழைக்கு முன்னதாக மே மாதத்தில் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட வாழைத்தார்கள் நல்ல விளைச்சலடைந்த நிலையில் இருந்ததால் அறுவடை பணி அதிகமானது. தற்போது மழைக்குறைவால், கடந்த சில வாரமாக வாழை அறுவடை பணி மேலும் தொடர்ந்திருந்தது.

இந்த வாரத்தில் நேற்று நடந்த வாழைத்தார் விற்பனையின்போது, சுற்றுவட்டார பகுதியிலிருந்தே ஓரளவு வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மேலும், திருச்சி மற்றும் தூத்துக்குடி பகுதியிலிருந்தும் வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இருப்பினும் வரும் 1ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் 2ம் தேதி தேதி விஜயதசமி என்பதால் அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதில், செவ்வாழைத்தார் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், மோரீஸ் ரூ.40க்கும், பூவன்தார் ரூ.40க்கும், கற்பூரவள்ளி ரூ.42க்கும், கேரள ரஸ்தாளி ரூ.45 வரையிலும் என அனைத்து வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனையாகியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.