Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பலூசிஸ்தான் விடுதலைப்படை பயங்கரவாத அமைப்பு: பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா நடவடிக்கை!

வாஷிங்டன்: பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த மலைகள் கொண்டது பலுசிஸ்தான் மாகாணம். இதை தங்களின் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பலூசிஸ்தான் விடுதலை படை அந்நாட்டுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. 2024ம் ஆண்டு பாகிஸ்மான் கராச்சி விமான நிலையம், குவெட்டா ஆகிய இடங்களில் பலூசிஸ்தான் விடுதலை படை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இது தவிர குறிப்பிட்ட இடைவெளியில் பாகிஸ்தான் ராணுவத்திடமும் சண்டையிட்டு வருகிறது.

இந்நிலையில் தொடர் வன்முறை தாக்குதல்களை அடுத்து, பலூசிஸ்தான் விடுதலை படை மற்றும் அதன் மற்றொரு பெயரான மஜீத் படைப்பிரிவை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்த அறிவிப்பை செய்திக்குறிப்பு மூலம் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது; பலூசிஸ்தான் விடுதலை படையின் வன்முறை நடவடிக்கைகள் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. மேலும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்தும் வருகின்றன. வெளியுறவுத்துறையின் இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான ஆதரவை குறைப்பதற்கு இதுவே ஒரு சிறந்த வழி. இவ்வாறு அவர் கூறி உள்ளார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.