Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற பாகுபலி யானை

மேட்டுப்பாளையம்: நீண்ட நாட்களுக்கு பின்னர் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் பாகுபலி யானை கம்பீரமாக நடந்து சென்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீரை தேடி இந்த யானை வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வந்தது.

ஆனால், இதுவரை இந்த யானை மனிதர்கள் எவரையும் தாக்கவோ, தாக்க முயற்சிக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த யானை வனப்பகுதிக்குள் சென்றிருந்த நிலையில், நேற்றிரவு மீண்டும் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பரபரப்பான ஊட்டி சாலையை கம்பீரமாக கடந்து நெல்லி மலை வனப்பகுதிக்குள் சென்றது. இதனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பாகுபலி யானையின் நடமாட்டம் தென்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.