சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உலகளாவிய பாதுகாப்பு இயக்கமாக “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரமானது” வரும் 10ம் தேதி வரை நடத்தப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெண்கள், சிறுமிகள் மற்றும் அனைத்து பாலினங்களும் தன்னம்பிக்கை, மரியாதை மற்றும் பாதுகாப்புடன் நகரத்தில் வாழும் சூழலை உருவாக்குவதில் சென்னை மாநகராட்சி தொடர்ச்சியான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பாக, மரியாதையுடன் வாழும் நகரத்தை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி சார்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் “16 நாள் உலகளாவிய பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்” (16 Days of Activism Against Gender-Based Violence) சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உலகளாவிய பாதுகாப்பு இயக்கமாக கடந்த 25.11.2025 முதல் தொடங்கப்பட்டு வருகின்ற 10.12.2025 வரை நடத்தப்படுகிறது.
இந்த பாதுகாப்பு இயக்கமானது, “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றுபடுங்கள்” (“Unite to End Digital Violence Against All Women and Girls”) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, பெண்ணுரிமை பேணுவோம், பெண்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பெண்கள், சிறுமிகள், இளம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கான உடல், உளவியல், தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பைக் குறித்து பொதுமக்களிடையே வலுவான விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்,
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பான பயணம் மற்றும் தகவல் தொழில்நுட்ப உலகத்தை உருவாக்குதல், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பிற பாலினங்களுக்கு அரசு திட்டங்கள், உதவி எண்கள், பாதுகாப்பு வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பாதுகாப்பு கல்வி மற்றும் சுயபாதுகாப்பு திறன்கள், இணையத் தொடர்பு அனைத்திலும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்வானது, மாநகரப் போக்குவரத்துக் கழகம், மாநகர காவல்துறை, சமூக அமைப்புகளுடன் இணைந்து மாநகராட்சிப் பகுதிகளில் வணிக வளாகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகிய பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் தெருவியல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், பாதுகாப்பு உரையாடல்கள், திருநங்கை சமூகத்திற்கான பாதுகாப்பு இணைவு நிகழ்வுகள்,
பள்ளி, கல்லூரிகளில் சுயபாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கல்வி, நடைபயணம், மனித சங்கிலி, கையொப்பப் பிரச்சாரங்கள், “Red Dot – Anti-Street Harassment Campaign” ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் மீது நடைபெறும் வன்முறையை ஒழிக்க உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற ஒளியினை முன்னிறுத்தும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க ரிப்பன் கட்டடமானது இந்த பிரச்சார நாட்களில் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்படுகிறது. வன்முறையற்ற மற்றும் பாதுகாப்பான நகரத்தை உருவாக்கும் முக்கியமான நிகழ்வாக இந்த 16 நாள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுகிறது.

