திருப்பூர்: அவிநாசி அருகே புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது மாமியாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து திருப்பூர் கோர்ட் உத்தரவிட்டது. திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரை என்பவரது மகள் ரிதன்யாவுக்கும் (27), கைகாட்டி புதூர் ஜெயம் கார்டன் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி-சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கவின்குமார் மற்றும் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டும், உடல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாலும் கடந்த 28ம் தேதி ரிதன்யா சேவூர் அருகே செட்டிபுதூர் பகுதியில் காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு காரில் இருந்தவாறு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை கைது செய்தனர். இதற்கிடையே, ஜாமீன் கேட்டு திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் சித்ராதேவி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ரிதன்யாவின் தந்தை சார்பில் ஜாமீன் வழங்கக்கூடாது என்று இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி குணசேகரன் மனுவை விசாரித்து சித்ராதேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.