பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோர் மோதும் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், இளம் இந்தியா - இளம் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸி அணியின் துவக்க வீரர்கள் அலெக்ஸ் டர்னர், சைமன் பட்ஜ் ரன் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். பின் வந்தோரில், ஸ்டீவன் ஹோகன் 38, டாம் ஹோகன் 41, ஜான் ஜேம்ஸ் ஆட்டமிழக்காமல் 77 ரன் எடுத்தனர்.
பிற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், ஆஸி அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 225 ரன் மட்டுமே எடுத்தது. அதையடுத்து, 226 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இளம் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். துவக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 22 பந்துகளில் 38 ரன் விளாசி ஓய்ந்தார். கேப்டன் ஆயுஷ் மாத்ரே 6 ரன்னிலும், பின் வந்த விஹான் மல்கோத்ரா 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பின் இணை சேர்ந்த வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு, ஆஸி பந்து வீச்சை துவம்சம் செய்து ரன்களை வேட்டையாடினர். சிக்சர்களும், பவுண்டரிகளுமாக துரத்திய இந்த இணை, 152 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது. வேதாந்த் 69 பந்தில் 61, அபிக்ஞான் 74 பந்தில் 87 ரன் விளாசினர். அதனால், 30.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன் குவித்த இளம் இந்தியா அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது.