Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோவை போலீஸ் ஸ்டேசன் முன் பாஜ நிர்வாகி தீக்குளிக்க முயற்சி: மகளிர் அணி தலைவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு

அன்னூர்: பாஜ மகளிர் அணி தலைவி மீது குற்றம்சாட்டி கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பாஜ நிர்வாகி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை அன்னூர் அடுத்துள்ளது போயனூர். இந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் (38). இவர் பாஜ கட்சியில் கிளை தலைவர். பாஜவின் கோவை வடக்கு மகளிர் அணி மாவட்ட தலைவி பிரபாவதி (39). இவர் டிரஸ்ட் துவங்குவதாக கூறி பிரகாசிடம் கடந்த 2023ம் ஆண்டும் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரூ.10 லட்சத்துக்கான கடனுக்கு செக் கொடுத்துள்ளார் பிரபாவதி. அதனை பிரகாஷ் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று செக் ரிட்டன் ஆனது. இதில் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் இது குறித்து பிரபாவதியிடம் கேட்டபோது டிரஸ்ட் துவங்க உரிமம் கிடைக்கவில்லை என்று பணம் தர மறுத்துள்ளார். இதனையடுத்து பிரகாஷ் அன்னூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் பிரகாசும் அவரது மனைவி திவ்யாவும் நேற்று அன்னூர் போலீஸ் நிலையம் வந்தனர்.

அப்போது திடீரென பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த டீசல் கேனை எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர். சுதாரித்த போலீசார் ஓடி வந்து அவரிடம் இருந்த டீசல் கேனை பறிமுதல் செய்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொடுத்த பணம் கிடைக்காமல் போய்விடும் என்ற விரக்தியில் பிரகாஷ் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தது தெரியவந்தது. மேலும் பிரகாஷ் மீது பிரபாவதி புகார் ஒன்றினை கோவை எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இரு தரப்பிலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

* ‘மாவட்ட தலைவர் மிரட்டுகிறார்’

பிரகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘செக் மோசடி வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று பாஜ மகளிர் அணி வடக்கு மாவட்ட தலைவர் பிரபாவதியும், மாவட்ட தலைவர் மாரிமுத்துவும் என்னை மிரட்டுகின்றனர். இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாதங்கள் தான் உள்ளது.

இது கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும். வழக்கை வாபஸ் பெறாவிட்டால் வாகனத்தில் செல்லும்போது ஒரு தட்டு தட்டி விட்டு சென்று விடுவோம் என்று கூறி என்னை மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இது குறித்து மாவட்ட தலைவர் மாரிமுத்துவிடம் கேட்டபோது, ‘இந்த பிரச்னைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை’ என்று கூறினார்