Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மலைக்கிராமங்களில் யானை தொடங்கி சிறுத்தை வரை வனவிலங்குகளின் ‘அட்ராசிட்டி’ தொடர்ந்து அதிகரிப்பு

*நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வருசநாடு : தேனி மாவட்ட மலைக்கிராமங்களில் காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தேனி மாட்டத்தில், தேவாரம், பண்ணைபுரம், போடி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடமலைக்குண்டு ஒன்றியம் வருசநாடு, தேவாரம், பண்ணைபுரம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது காட்டு யானை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும் அங்கு பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் காட்டு மாடு, யானை அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை தாக்கி விடுகிறது. வருசநாடு அருகே நேற்று, கரடி தாக்கி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் மலை விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது சவாலாகவே உள்ளது.

எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, வனவிலங்குகளை விவசாய நிலங்களுக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

பெரும்பாலான கிராமங்களில் விவசாய நிலங்களில் தொல்லை தரும் யானைகளை அடர்ந்த வனங்களில் கொண்டு சென்று விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.காட்டு யானைகள் அதிகம்:

ேகரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. காட்டுயானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அவ்வப்போது மூணாறு ரோட்டிலும் சுற்றித்திரிகிறது.

இதேபோல், ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையத்தையும் காட்டுயானை அடித்து நொறுக்குகிறது. மூணாறில் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் அட்டகாசமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதுபோல், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை பகுதிகளில் நெல்லி, மா, சப்போட்டா, தென்னை, வாழை விவசாயம் நடக்கிறது. இப்பகுதியில் அவ்வப்போது, காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பண்ணைப்புரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இதுமட்டுமின்றி, தண்ணீருக்கு பயன்படுத்தப்படும் பைப், மோட்டார் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக சேதப்படுத்தி செல்கின்றது.

கூண்டு வைத்து பிடிங்க சார்...

இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், ‘‘இப்பகுதியில் சுற்றித்திரியும் கரடி, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், பகல்நேரத்திலேயே சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.

குறிப்பாக, ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். புலி, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளிடம் இருந்து தப்பித்து செல்வதே பெரும்பாடாக உள்ளது.

மேலும் மாலை 6 மணிக்கு மேல் மலைக்கிராமத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. இதன் காரணமாக வீடுகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, கடலை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட சிரமமாக உள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சிறுத்தை, கரடிகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்’’என்றனர்.

ரீசன்ட் விசிட் சம்பவங்கள்

கடமலைக்குண்டு அய்யனார்கோயில் அருகே தம்புரான் மலை அடிவாரப்பகுதியில் விவசாயிகளுக்கு சொந்தமான பட்டா நிலங்கள் உள்ளன. இங்கு பல ஏக்கரில் தென்னை, வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 12ம் தேதி இரவு இப்பகுதி விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானைகள் மாயகிருஷ்ணன் என்பவரின் தோட்டத்தில் 180 தென்னை மரங்களையும், அய்யனார் புரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் வாழை தோட்டத்தில் 30 வாழை மரங்களையும், வசந்த நாராயணன் என்பவரின் தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளன.

இதே போல், தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் சாலைக்கு கீழ் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான காமக்கப்பட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதியில் தோட்டங்களில் மாடு மற்றும் ஆடுகள் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக கெங்குவார்பட்டி மற்றும் காமக்காபட்டி கொடைக்கானல் சாலைக்கு கீழ் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வந்த 5க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 3 பசு கன்றுகளை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளான 5 ஆடுகள் மற்றும் 3 கன்று குட்டிகளை சிறுத்தை தாக்கிக் கொன்றுள்ளது. எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.