சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்திலுள்ள அரசு கல்லூரிகளுக்கு 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு கூறி வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின் ஓராண்டு ஆகியும் இன்னும் தேர்வு நடத்தப்படவில்லை.
அதேபோல், 2025ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டுத் திட்டம் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட போது, அதில் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை தேர்வுக்கான தேதி கூட அறிவிக்கப்படவில்லை.
மேலும், அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள 90 சதவீத உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 9 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.