Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் மீது சபாநாயகரே முடிவெடுக்க முடியும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

சென்னை: தமிழக சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு சென்ற வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது. முந்தைய அதிமுக ஆட்சியில், சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது. இந்த நோட்டீசை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து சட்டப்பேரவை உரிமைக் குழு, திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக் குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், நோட்டீஸ் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தற்போதைய சபாநாயகர்தான் முடிவெடுக்க முடியும் என்பதால் அதனை சபாநாயகரின் முடிவுக்கே விட்டு விட வேண்டுமென்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சட்டமன்றம் மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றோடு ஒன்று தலையிடக் கூடாது. நோட்டீஸ் மீது இறுதி முடிவெடுக்கப்படாத நிலையில், அதில் தலையிட்டு ரத்து செய்தால் அது மிகவும் தவறான முன்னுதாரணமாகும் என்று குறிப்பிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.