Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசோலா!

கால்நடை தீவனமாகவும், நெல் வயலுக்கு நல்ல வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும் அசோலா வளர்ப்புக்கு உகந்த சூழல் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். அசோலாவின் வளர்ச்சிக்கு வேறு என்னென்ன அம்சங்கள் தேவை என்பதை இந்த இதழில் காணலாம்.

காற்றில் ஈரப்பதம்

அசோலா வளர்ச்சிக்கு காற்றில் ஈரப்பதமானது 85 - 90 சதவீதம் இருக்க வேண்டும். ஈரப்பதமானது 60 சதவீதத்திற்கு கீழ் வந்துவிட்டால் அசோலா காய்ந்துவிடும்.

தண்ணீரின் தரம் -

கார அமில நிலை

தண்ணீரின் கார அமில நிலை பிஎச் 5 -7 வரை இருக்க வேண்டும். உப்பு நீரில் வளராது. அதிக உப்பு இருந்தால் வளர்ச்சி தடைபடும். அதிகப்படியான அமிலத்தன்மையும், அதிகப்படியான காரத்தன்மையும் உள்ள தண்ணீரில் அசோலாவை வளர்க்க இயலாது.

காற்று

வேகமாக வீசும் காற்று மறைமுகமாக அசோலா வளர்ச்சிக்கு இடையூறு செய்யும். காற்று வீசும்போது தண்ணீரில் மிதக்கும் அசோலா எதிர்திசையில் சென்று மொத்தமாக ஒதுங்கி அங்கு நெருக்கம் உண்டாகும். அதிக நெருக்கடியால் வளர்ச்சி குறையும். இறப்பும் நேரும். அதிக வேகமான காற்று அசோலாவில் சிதைவுகளை ஏற்படுத்தும்.

சத்துகள்

அசோலா தனக்குத் தேவையான சத்துக்களை தண்ணீரில் இருந்து எடுத்துக்கொள்கிறது. அசோலா வளர்வதற்கு அனைத்து வகையான சத்துக்களும் தேவைப்பட்டாலும் பாஸ்பரஸ் எனும் மணிச்சத்து அதிக அளவில் தேவை. தண்ணீரில் கரையும் பாஸ்பரஸை அடிக்கடி கொடுப்பதன் மூலம் அசோலாவின் வளர்ச்சி சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். தண்ணீரில் 20 பிபிஎம் அளவிற்கு மணிச்சத்து (பாஸ்பரஸ்) எப்போதும் இருக்க வேண்டும்.நுண் ஊட்டச்சத்துக்கள் வளர்ச்சியையும் இனப்பெருக்கத்தையும் துரிதப்படுத்தும்.

அசோலாவின் நன்மைகள்

அசோலா மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது. பசுந்தாள் உரமாக பயன்படுகிறது. பயிர் உற்பத்தியை அதிகரிக்கிறது. நாற்றங்கால் விடப்பட்ட 2 அல்லது 3 நாட்களில் இரு மடங்காகப் பெருகும். அசோலாவின் உற்பத்திப் பெருக்கமும் சுலபம். அசோலா புரதச்சத்து நிறைந்தது. ஆகையால் மீன், கோழி போன்றவற்றுக்கு தீவனமாகவும் பயன்படும். நீர்நிலைகளில் படர்ந்து வளரும் தன்மை உடையதால் களைகள், கொசுக்களைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, விவசாயிகள் தங்களது மண்வளத்தைப் பாதுகாக்க அசோலா உயிரி உரத்தைப் பயன்படுத்தலாம்.

குறைந்த ஆழம் உள்ள தேங்கிய தண்ணீரே அசோலா வளர்ப்பதற்கு ஏற்றது. நமக்கு அசோலா தேவைப்படும் இடத்திற்கு அருகிலும், அடிக்கடிச் சென்று பார்வையிட வசதியான இடத்திலும், எளிதில் தண்ணீர் கிடைக்கின்ற இடத்தின் அருகாமையிலும் அசோலா வளர்க்க ஏற்ற இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். நிழலான பகுதியை தேர்வு செய்ய வேண்டும். அல்லது நிழல் வலையைப் பயன்படுத்தி செயற்கையாக நிழல் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தண்ணீர் ஆவியாவது குறைந்தால் அசோலாவின் வளர்ச்சி நன்கு இருக்கும். தரைப்பகுதி கூரான கற்கள், முள், வேர் போன்றவைகள் இல்லாமல் நன்கு சமப்படுத்தப்பட வேண்டும். இவைகள் இருந்தால் தண்ணீரை தேக்குவதற்காக விரிக்கும் பிளாஸ்டிக் பாய் கிழிந்து தண்ணீர் கசிந்து வீணாகும்.

அசோலா வளர்ப்புத்தொட்டி கால்நடைகளின் எண்ணிக்கை தற்போது கிடைக்கும் திட, சத்துணவு, இடம், தண்ணீர் போன்றவைகளின் இருப்பு போன்றவற்றை அனுசரித்து மாறக்கூடியது. தினசரி 2 கிலோ அசோலா உற்பத்தி செய்ய 6 அடி X 42 அடி அசோலா வளர்ப்புத் தொட்டி போதுமானது. நாம் தேர்வு செய்த நிழலான இடத்தை நன்கு சமன் செய்துகொள்ள வேண்டும். இடம் மிகச்சரியாக சமமாக இருப்பது அவசியம். மட்டமான மரப்பலகையை வைத்து பொடி மணலை தூவி இடத்தை சமப்படுத்திக்கொள்ள வேண்டும். 6X4 அளவுள்ள சற்று தடிமனான ப்ளாஸ்டிக் பாயை விரித்து அதனைச் சுற்றிலும் இரண்டு வரிசை உயரம் செங்கல்லை அடுக்கி, தண்ணீர் தேங்கி நிற்கும் அமைப்பை உண்டாக்க வேண்டும். இந்த பிளாஸ்டிக் தாளில் எந்தத் துளையோ, கிழிசலோ இல்லாமல் இருப்பது மிக முக்கியம். நிலத்தை சமப்படுத்தியபின் அதன்மேல் பழைய சாக்கு, பிளாஸ்டிக் சாக்கு போன்றவற்றைப் பரப்பி அதன்மேல் விரித்தால் அருகிலுள்ள மரங்களின் வேர்களால் உண்டாகும் துளைகள் மட்டுப்படுத்தப்படும். இந்த அமைப்பில் 10 செமீ உயரத்திற்கு தண்ணீர் நிரப்ப வேண்டும். அத்துடன் மூன்று கூடை அளவிற்கு குளத்து வண்டல் மண்ணைப் பொடி செய்து தூவி, அத்துடன் போர் போடும்போது கிடைக்கின்ற கல்மாவை 2 கிலோ அளவில் தூவ வேண்டும். போர் மண் கிடைக்கவில்லையென்றால் 50 கிராம் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் தூவலாம். அத்துடன் 2 கிலோ பசுஞ்சாணத்தைத் தண்ணீரில் கரைத்து அதிலுள்ள அமோனியா மீத்தேனை வெளியேற்ற அதனையும் கலக்க வேண்டும்.

(அசோலா வளர்ப்புத்தொட்டி குறித்து அடுத்த இதழிலும் காணலாம்)