சென்னை: சென்னையில் ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் நவம்பர் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளன. சென்னையில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் நவ.5ம் தேதி முதல் 9ம் தேதி வரை, இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தால் நடத்தப்பட உள்ளன.
இந்த போட்டிகளில் 35 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்பர். இதில், 30 நாடுகளை சேர்ந்த 4,000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிகள் முதலில் இந்தோனேஷியாவில் நடத்தப்பட இருந்தன. அதன்பின் பல்வேறு காரணங்களால் இப்போட்டிகள் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளன. விளையாட்டு துறைக்கு தமிழக அரசு அளித்து வரும் உறுதியான ஆதரவு, தடகள போட்டிகளை சென்னைக்கு அழைத்து வந்துள்ளது.
இதற்கு முன், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த 2000 மற்றும் 2006ம் ஆண்டுகளில் பெங்களூருவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. தற்போது 3வது முறையாக, இந்தியாவில் சென்னை நகரில் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளின் பிராண்ட் தூதராக திரைப்பட நடிகர் ஆர்யா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தேசிய சாம்பியனும், தமிழ்நாடு தடகள சங்க செயலாளருமான லதா, தொழில்நுட்ப இயக்குநராக பணியாற்ற உள்ளார்.