துபாய்:ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ போட்டியில் இன்று இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை ‘டி-20’ தொடர் நடக்கிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடக்கும் ‘சூப்பர்-4’ போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளிலும் தரமான ‘ஸ்பின்னர்’கள் இருப்பதால், போட்டியின் போது மைதானத்தில் ‘சுழல்’ சூறாவளி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் இந்திய அணி மிக வலுவாக உள்ளது.
ஓபனர் அபிஷேக் சர்மா இதுவரை 4 போட்டியில் விளையாடி 173 ரன் குவித்து அட்டகாச பார்மில் உள்ளார். சுப்மன் கில்லும் ஒத்துழைப்பு கொடுத்தால் இன்றைய போட்டியில் அபிஷேக் சர்மாவிடம் இருந்து பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். அடுத்ததாக கேப்டன் சூர்யகுமாரின் வான வேடிக்கை, திலக் வர்மாவின் ருத்ர தாண்டவம் தொடரும் பட்சத்தில் வங்கதேச பவுலர்களுக்கு சிக்கல் தான். சஞ்சு சாம்சன் பார்முக்கு திரும்பவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்துவரும் ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, மற்றும் ஷிவம் துபே இந்திய அணியின் துருப்பு சீட்டுகளாக உள்ளனர். பவுலிங்கில் ‘வேகப்புயல்’ பும்ரா அதிக ரன்களை விட்டுக் கொடுப்பது கொஞ்சம் கவலையளிக்கிறது. ‘சுழலில்’ வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் நல்ல பார்மில் இருப்பதால் இன்றும் அவர்கள் மிரட்டக்கூடும்.
வங்கதேச அணியை பொறுத்தவரை கேப்டன் லிட்டன் தாஸ் முதுகு பிடிப்பால் அவதிப்படுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. பேட்டிங்கில் இலங்கையுடனான போட்டியில் 45 பந்தில் 61 ரன்கள் குவித்த சைப் ஹசன் மற்றும் அந்த போட்டியில் அரை சதம் அடித்த டௌவ்ஹிட் ஹ்ரிடாய் நம்பிக்கை அளிக்கின்றனர். பந்துவீச்சில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நெருக்கடி தந்த டஸ்கின், முஸ்டபிசுர், மெஹதி ஹாசன் ஆகியோர் இந்தியாவுக்கும் தொல்லை கொடுக்கலாம்.
போராடினால் இந்தியாவை விழ்த்தலாம்;
துபாய் வானிலை வெப்பமாக இருக்கு என்பதால், ஆடுகளம் மந்தமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்க முடியாது. வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் (வெ.இ.,) கூறுகையில்,’’டி-20 அரங்கில் இந்தியா தான் ‘நம்பர்-1’ அணி. அதை மறுக்கவில்லை. ஆனால் போட்டி நடைபெறும் நாளில் மைதானத்தில் சிறப்பாக ஆடும் அணி வெற்றி பெறும். டி20 பொறுத்தவரை எந்த நிமிடத்திலும் எதுவும் நடக்கலாம். மேலும் இந்தியா வீழ்த்த முடியாத அணி ஒன்றும் இல்லை. இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் திறமை அனைத்து அணிகளுக்கும் உண்டு. கடுமையாக போராடினால் எந்த அணியாலும் இந்தியாவை வீழ்த்த முடியும்.’’என்றார்.