ஆசிய கோப்பை டி.20 தொடரில் பரம எதிரி பாகிஸ்தானுடன் இந்தியா இன்று மோதல்: துபாயில் இரவு 8 மணிக்கு போட்டி தொடக்கம்
துபாய்: 17வது ஆசிய கோப்பை டி.20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், யுஏஇ, ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
6வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மோதுகின்றன. இந்தியா தொடக்க லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் யுஏஇ அணியை வீழ்த்திய நிலையில் இன்றும் வெற்றிபெற்று சூப்பர் 4 சுற்றை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது. நம்பர் 1 அணியான இந்தியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் என அதிரடி வீரர்கள் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி அசத்த காத்திருக்கின்றனர். மறுபுறம் சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான், தனது முதல் ஆட்டத்தில் ஓமனை 93 ரன் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் வீழ்த்திய உத்வேகத்தில் உள்ளது. பேட்டிங்கில் சல்மான் ஆகா, விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ், பஹர் ஜமான், பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரர் பார்மில் உள்ளனர். ஆல்ரவுண்டர்களாக முகமது நவாஸ், சைம் அயூப் வலு சேர்க்கின்றனர். ஆடும் லெவனில் இருஅணிகளில் இன்று எந்தவித மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின் பரம எதிரிகளாக இந்தியா-பாகிஸ்தான் மோதுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்றொருபுறம் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்த போதிலும் இன்று திட்டமிட்டபடி மோதல் நடக்கிறது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம்.
பிட்ஸ்.. பிட்ஸ்..
* 2014ம் ஆண்டில் இருந்து இருஅணிகளும் மோதிய 8 டி20 போட்டிகளில் 7ல் போட்டிகளில் சேஸிங் அணிதான் வெற்றி பெற்றுள்ளது. இதில் துபாயில் நடந்த 3 போட்டிகளும் அடங்கும்.
* பாகிஸ்தானுக்கு எதிரான 7 டி20 போட்டிகளில் ஆடி உள்ள ஹர்திக் பாண்டியா 13 விக்கெட் எடுத்துள்ளார்.
* பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா 2012ல், அகமதாபாத்தில் 192/5 ரன் எடுத்தது தான் அதிகபட்சமாகும். பாகிஸ்தான் துபாயில் 2022ல் 182/5ரன் எடுத்தது தான் பெஸ்ட் ஸ்கோர்.
குல்தீப் யாதவை விட நவாஸ் சிறந்தவரா?
இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் அளித்த பேட்டி: சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக இடம்பெறுவார். அவர் மிடில் ஆர்டரில் பேட் செய்வார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணியில் எந்த மாற்றமும் இருக்காது, என்றார். பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன், தற்போது உலகின் சிறந்த டி20 சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் தான் என்று கூறிஇருந்தார்.அதாவது குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தியை விட முகமது நவாஸ் சிறந்தவர் என்ற எண்ணத்தில்அவர் தெரிவித்திருந்தார். இதுகுறித்தகேள்விக்கு பதில் அளித்த ரியான், அவர் தங்கள் வீரர்களை எப்படி மதிப்பிடுகிறார் என்பதைப் பற்றி தனக்கு கவலையில்லை, என்றார்.
நேருக்கு நேர்..
இவ்விரு அணிகளும் இதற்கு முன் டி.20 போட்டியில் 13 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன.இதில் 10ல் இந்தியாவும், 3ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க்கில் டி.20 உலக கோப்பையில் லீக் ஆட்டத்தில் சந்தித்தன. அதில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. கடைசியாக மோதிய 5 போட்டியில் இந்தியா 3, பாக். 2ல் வென்றுள்ளன. துபாயில் இதுவரை மோதிய 3 போட்டியில் பாக். 2ல் இந்தியா 1ல் வென்றிருக்கிறது.