துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. ஷாகின் அப்ரிடி வேகத்தில் குஷால் மெண்டிஸ் டக் அவுட் ஆக, பதும் நிசாங்கா 9 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த குஷால் பெராரே 15 ரன்னிலும், கேப்டன் அசலங்கா 20 ரன்னிலும், சனகா டக் அவுட் ஆக இலங்கை 58 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து காமிண்டு மெண்டிசுடன், ஹசரங்கா ஜோடி சேர்ந்தார். ஆனால் இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. ஸ்கோர் 80 ரன்னாக இருந்த போது ஹசரங்கா 15 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கருணாரத்னே, காமிண்டு மெண்டிசுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். ஸ்கோர் 123 ஆக இருந்த போது காமிண்டு மெண்டிஸ் அரை சதம் கடந்த நிலையில் அவுட் ஆனார். கடைசி ஓவரில் சமீரா 1 ரன்னில் வெளியேற 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
கருணாரத்னே 17 ரன், தீக்ஷனா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 3 விக்கெட், ஹாரிஸ் ரவுப், உசேன் தாலட் தலா 2 விக்கெட் எடுத்தனர். 134 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வௌிப்படுத்திய பாகிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு, 138 ரன் எடுத்து வெற்றி பெற்றது.