*ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்
அருமனை : அருமனை அருகே விவசாயி நிலத்தில் சுமார் 44 கிலோ எடையுள்ள ராட்சத மரவள்ளிக்கிழங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.அருமனை அருகே கடையாலுமூடு தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (55). விவசாயி.
இவர் விவசாய நிலத்தில் ரப்பர், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்திருந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வேலி அமைத்து, மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து பராமரித்து வந்தார். இந்தநிலையில் நேற்று அவரது நிலத்தில் சாகுபடி செய்திருந்த மரவள்ளிக்கிழங்குகளை தோண்டி எடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது மண்ணுக்குள் இருந்து ராட்சத, அதிக எடையுள்ள மரவள்ளிக்கிழங்கு இருப்பதை கனகராஜ் பார்த்துள்ளார். அதனை எடுக்க முயன்றபோது அவரால் தனியாக மரவள்ளிக்கிழங்கை எடுக்க முடியவில்லை. இதையடுத்து 3 பேர் சேர்ந்து சுமார் 44 கிலோ எடையுள்ள மரவள்ளிக்கிழங்கை வெளியில் எடுத்தனர்.
அதனுடைய விட்டம் 37 இன்ச் மற்றும் 4.5 சென்டி மீட்டர் உயரம் கொண்டதாக இருந்தது. விவசாயி நிலத்தில் அதிக எடை கொண்ட மரவள்ளிக்கிழங்கு எடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கனகராஜ் வீட்டுக்கு சென்று அதிசய மரவள்ளிக்கிழங்கை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.