மும்பை விமான நிலையத்தில் வேட்டை ரூ.22 கோடி தங்கம் போதைப்பொருள் கடத்தல்: இந்த மாதம் மட்டும் 6 பேர் கைது
மும்பை: நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம், கடத்தல் கும்பல்களின் முக்கிய மையமாக விளங்கி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் நடத்தப்பட்ட பல்வேறு அதிரடி சோதனைகளில் சுமார் ரூ.22 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், ‘ஆபரேஷன் வீட் அவுட்’ என்ற பெயரில் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் நடத்திய ஒருங்கிணைந்த சோதனையில், 39.2 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, பாங்காங்கில் இருந்து வந்த இரண்டு இந்தியர்கள் மற்றும் அதைப் பெறக் காத்திருந்த ஒருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், செப்டம்பர் 21 முதல் 24ம் தேதி வரை நடந்த பல்வேறு சோதனைகளில், பயணிகளிடமிருந்து கடத்தி வரப்பட்ட தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பையில் உள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்த மேற்கண்ட கும்பலைச் சேர்ந்த ஆறு பேரைக் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து எம்.டி.எம்.ஏ மற்றும் கோகைன் போன்ற போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.