Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியலூரில் ‘களவாணி’ திரைப்பட பாணியில் சென்னை செவிலியரை காரில் கடத்திய இன்ஸ்டா காதலன்: கத்தி பட்டதில் ரத்தம் சொட்ட சொட்ட கதறிய சகோதரியின் குழந்தை

அரியலூர்: அரியலூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வீட்டில் சிறை வைக்கப்பட்ட சென்னை செவிலியரை ‘களவாணி’ திரைப்பட பாணியில் நண்பர்களுடன் சேர்ந்து இன்ஸ்டா காதலன் காரில் கடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயது பெண். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 28 வயது வாலிபர், சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 1 மாதத்திற்கு முன்பு இருவரும் சொந்த ஊர் வந்தனர். பின்னர், காதலன் வீட்டிற்கு சென்ற செவிலியர் அவரது பெற்றோரை சந்தித்து பேசியுள்ளார். அதற்கு அவர்கள் காதலை ஏற்க மறுத்து செவிலியரை திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, காதல் ஜோடி திருச்சியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்து அங்கு சென்ற செவிலியரின் பெற்றோர், அவரை அழைத்து வந்து அரியலூரில் உள்ள சகோதரி வீட்டில் சிறை வைத்தனர். இந்த தகவலை தனது காதலனுக்கு செவிலியர் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நேற்றுமுன்தினம் வாடகை காரில் சின்னபட்டாக்காடு கிராமத்திற்கு தனது நண்பர்களுடன் காதலன் சென்றார். அங்கு தெருமுனையில் ஓரமாக காரை நிறுத்திய அவர், தனது நண்பர்கள் 3 பேரை அனுப்பி, காதலியின் அக்கா வீட்டில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் கையில் மஞ்சள்பை ஒன்றை பிடித்த படியே அனுப்பி வைத்தார்.

அவர்கள் கத்தியை மறைத்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தனது சகோதரி மகளுடன் விளையாடி கொண்டிருந்த காதலி, காதலனின் நண்பர்களை கண்டதும் காரில் ஏறி தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனை கண்ட அவரது சகோதரி சத்தம் போட்டு தடுக்க முயன்றுள்ளார். அப்போது, காதலனின் நண்பர்கள், அவரை கத்தியை காட்டி மிரட்டிய போது குழந்தை கையில் கத்தி பட்டு ரத்தம் கொட்டியது.

இதனால் குழந்தை வலிதாங்க முடியாமல் சத்தம் போட்டு அழுதது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், திரண்டு வந்து அவர்களை தடுக்க முயன்ற போது அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு, காரில் ஏறி காதல் ஜோடி பறந்தது. இதனால் ஆத்திரமடைந்தவர்கள் கார் மீது கல்வீசி தாக்கினர்.

இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.  ‘களவாணி’ திரைப்பட பாணியில், சகோதரி கண்முன்னே தனது நண்பர்களுடன் சேர்ந்து காதலியை ‘இன்ஸ்டாகிராம்’ காதலன், காரில் கடத்தி தப்பி செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.