*எம்எல்ஏ வழங்கினார்
ஆற்காடு : ஆற்காடு ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் அப்சர் பாஷா வரவேற்றார்.
நகர திமுக செயலாளர் ஏ.வி.சரவணன், நகராட்சி தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத்தலைவர் பவளக்கொடி சரவணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பழனி, மாதிரி பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெயந்தி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு 171 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
மேலும், மாவட்ட அளவிலான ஹாக்கி, வாலிபால் போட்டிகளில் வெற்றி பெற்று திருச்சி தொட்டியத்தில் நடந்த மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விளையாடிய வீரர்களுக்கு சான்றுகளை வழங்கினார்.
அப்போது எம்எல்ஏ பேசுகையில், `தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார். முடிவில் முதுகலை ஆசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.


