Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிப்புக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் குடும்பத்தினர் சந்திப்பு

சென்னை: சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்திய விடுதலை போராட்ட தியாகி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி, காந்தியடிகளால் தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று போற்றப்பட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் உருவச்சிலை ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அவர் பிறந்த நாளான ஜூன் 1ம் தேதி கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார், வன்னியர் பொது சொத்து நல வாரிய தலைவர் மு.ஜெயராமன்,

அஞ்சலையம்மாள் பேத்திகள் இளவரசி, மங்கையர்க்கரசி, கொள்ளு பேத்தி மாலதி மற்றும் அவரது கணவர் சுகுமார், கொள்ளு பேரன் கோகுல்ராஜ், சமூகநீதி சத்திரியர் பேரவை இணை பொதுச்செயலாளர் எஸ்.எம்.குமார், மாநில துணை தலைவர் அருள் அன்பரசு, கடலூர் மாவட்ட அமைப்பாளர் எஸ்.சண்முகம், மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.பி.சசிகுமார், அமைப்பு செயலாளர் ப.மதியழகன், தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.சுப்பராயலு ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் அளித்த பேட்டியில், \”சுதந்திர போராட்ட வீராங்கனை கடலூர் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு அரசு விழா எடுக்கப்படும் என்று அறிவித்த முதல்வருக்கு சமூக நீதி சத்திரியர் பேரவை அமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டோம். எங்களது கோரிக்கையை ஏற்று முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இதன் மூலம் அஞ்சலை அம்மாளின் புகழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும்\” என்றார். அஞ்சலை அம்மாளின் பேத்தி மங்கையர்க்கரசி அளித்த பேட்டியில்,\”40 வருட காலம் போராட்ட வாழ்வில் ஈட்டுபட்ட போராளி அஞ்சலை அம்மாள். அவரின் பிறந்தநாளான ஜூன் 1ம் தேதி அரசு விழாவாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி\” என்றார்.