Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அண்ணாசாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு; தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை மேம்பாலம் டிசம்பரில் திறப்பு

அண்ணா சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக டிசம்பரில் திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அண்ணா சாலை சென்னை மாநகரின் மிகவும் முக்கியமான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது. குறிப்பாக, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள 3.5 கி.மீ தூரத்தை கடக்க சராசரியாக 25 முதல் 30 நிமிடங்கள் ஆகின்றது. இப்பகுதிக்குட்பட்ட அனைத்து சாலை சந்திப்புகளிலும் வாகனங்கள் அணிவகுத்து அதிகநேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. அந்த வகையில், நந்தனம் சந்திப்பு, சிஐடி நகர் சந்திப்பு ஆகியவற்றில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இப்போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், சென்னை அண்ணா சாலையில், 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தேனாம்பேட்டையிலிருந்து - சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான ஆழ்வார்பேட்டை தேனாம்பேட்டை பகுதிகளை பாண்டிபஜார் அண்ணா சாலையுடன் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தி.நகர் பகுதிகளை இணைக்கும் தியாகராயா சாலை சந்திப்பு, டி.டி.கே சாலையை அண்ணா சாலையுடன் இணைக்கும் எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு, சென்னை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான நந்தனம் சந்திப்பு, தி.நகர் பேருந்து நிலையம், உஸ்மான் சாலையை இணைக்கும் சிஐடி நகர் மூன்றாவது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு, சைதாப்பேட்டையில் உள்ள தாடண்டர் நகர் - ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகிய 7 முக்கிய சாலை சந்திப்புகளை கடக்கும் வகையில் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 3.20 கி.மீ நீளத்திற்கு 14 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து தற்போது அண்ணா சாலையில் கட்டுமானத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கான்கிரீட் இல்லாமல் இரும்பு தூண்களால் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் எதிர்பார்த்ததைவிட வேகமாக நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அண்ணா சாலையின் நடுவே மெட்ரோ ரயிலின் சுரங்க பாதை செல்வதால் தூண்கள் வடிவமைப்பது பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இப்பாலத்திலிருந்து வரும் அழுத்தம் சாலையின் கீழே தற்போது இயங்கி வரும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளை சிறிதளவும் பாதிக்காத வண்ணம் வடிவமைக்க வேண்டி இருந்தது, மேலும் பாலத்தின் அடித்தளம் அமைக்க ஆழமான பள்ளங்களை மற்றும் நீண்ட துளைகளை எடுக்க முடியாத சூழலும் இருந்தது. எனவே ஆழம் குறைந்த அடித்தளம் மட்டுமே அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், இப்பகுதியில் மண்ணின் தாங்கும் திறன் குறைந்த அளவே உள்ளதால், ஆழம் குறைந்த அடித்தளம் கொண்டு வடிவமைப்பது சாத்தியமற்றதானது. இதற்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கனவே தெரிவித்தபடி சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வல்லுநர்கள், ஐஐடி மெட்ராஸ் வல்லுநர்கள் மற்றும் இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்த உயர்மட்ட சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரும்பினால் ஆன முன்வார்க்கப்பட்ட கட்டமைப்பு உபகரணங்களைக் கொண்டும், மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தி தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தி.நகரில் அமைக்கப்பட்டு வரும் இரும்பு பாலம் போல இந்த உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் 18 மாதங்களில் முடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இரவு பகல் என முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான கட்டுமானத்திற்காக மெட்ரோ மற்றும் இதர தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆலோசனைப்படி கட்டப்பட்டு வருகிறது. அதன்படி வரும் டிசம்பர் மாதம் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு இந்த உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

  • மெட்ரோ ரயில் சுரங்கங்கள் அமைந்துள்ள நேர்பாட்டில் கட்டப்படும் முதல் உயர்மட்ட சாலையாகும்
  • உயர்மட்ட சாலையின் மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தூரத்தை 3 முதல் 5 நிமிடத்திலேயே கடந்து செல்லலாம்.
  •  கட்டுமானம் நிறைவடையும்போது சென்னை மாநகரின் மிக நீண்ட பாலமாக அமையும்.
  • இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு தொழில்நுட்ப நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உயர்மட்ட சாலை வடிவமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது
  •  பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரும்பினால் ஆன முன்வார்க்கப்பட்ட கட்டமைப்பு உபகரணங்களைக் கொண்டும் மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தை கொண்டும் மேம்படுத்தி அடித்தளம் அமைக்கப்படுகிறது.
  •  3.2 கி.மீ உயர்மட்ட சாலையில் 135 தூண்கள் அமைக்கப்பட உள்ளன.
  •  மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அல்லாத இடங்களில் 655 மீட்டர் நீளத்திற்கு 22 தூண்கள் அமையும். தற்போது இந்த இடத்தில் நிலத்தூண் அடித்தளம் அமைக்கப்படுகிறது.
  • மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை உள்ள இடங்களில் 1,955 மீட்டர் நீளத்திற்கு 69 தூண்கள் அமைகிறது.
  •  பாலத்தின் அழுத்த திறனை குறைக்கும் வகையில் மைக்ரோ பைல் என்ற புதிய தொழில்நுட்ப முறையில் பணிகள் நடக்க உள்ளது.
  •  ஜீயோ சிந்தெட்டிக் என்ற முறையில் மண்ணின் தாங்குத் திறன் அதிகரிக்கும் வகையில், ஜீயோ செல், ஜீயோ டெக்ட்டில்ஸ் மற்றும் ஜீயோ கிரிட் போன்ற 7 அடுக்குகளாக தூண்கள் அமைக்கப்படுகிறது.
  •  460 மீட்டர் நீளத்திற்கு தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் மெட்ரோ நிலையங்களில் 41 போர்டல் ப்ரேம் அமைக்கப்படுகிறது.