ரூ.68.2 கோடிக்கு போலி வங்கி உத்தரவாதம்; அனில் அம்பானி உதவியாளர் கைது: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. அவர் ரூ.17,000 கோடி வரை பணமோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பையில் உள்ள அனில் அம்பானியின் வீடு அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர். அனில் அம்பானி கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், இதுதொடர்பான வழக்கில், ஒடிசாவை தளமாக கொண்டு செயல்படும் பிஸ்வால் டிரேட்லிங்க் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த்த சாரதி பிஸ்வால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் என்யுபிஇஎஸ்எஸ் லிமிடெட் சார்பாக, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டுக்கு கொடுத்த ரூ.68.2 கோடிக்கான போலி வங்கி உத்தரவாதம் அளித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமார் பால் என்பவரை பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அசோக் குமார் பால் நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை இரண்டு நாள் அமலாக்கத்துறை காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.