தென்கொரியா, மொரீசியஸ், ஜப்பானிலும் போட்டியிடுவார் :பீகாரில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னம் பெற்ற அன்புமணி குறித்து ராமதாஸ் கிண்டல்
விழுப்புரம் : போலி ஆவணங்கள் கொடுத்து மாம்பழம் சின்னத்தை அன்புமணி பெற்றுள்ளதாக ராமதாஸ் பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், "நாங்கள்தான் பாமக எனக் கூறிக்கொண்டு ஒரு கும்பல் சுற்றுகிறது. பீகாரில் போட்டியிடுவதாக போலி ஆவணங்கள் கொடுத்து மாம்பழம் சின்னம் பெற்ற அவர்களின் வேஷம் கலைக்கப்படும். பீகாரில் போட்டி என கூறிய அன்புமணி தென்கொரியா, மொரீசியஸ், ஜப்பானிலும் போட்டியிடுவார்.
அன்புமணியை என்றைக்கு கட்சியை விட்டு நீக்கினோமோ அன்றைக்கே எல்லாம் முடிந்துவிட்டது; பாமக எங்களுக்குத்தான் சொந்தம் என சொல்வது வெட்கமாக உள்ளது.கட்சி தொடர்பான ஆவணங்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம்; பை, பையாக பொய் வைத்துக் கொண்டு பேசுவோரின் வேஷம் கலைந்துவிட்டது. ஏன் பொய் சொன்னோம் என்று வருந்தும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்போகிறோம். டிசம்பர் முதல் வாரத்தில் 10.5% இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப்படும்,"இவ்வாறு தெரிவித்தார். ஏற்கனவே அன்புமணி சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் ராமதாஸ் போட்டி போராட்டம் அறிவித்துள்ளார்.