Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அன்புமணி பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ராமதாஸ் ஆதரவாளர் மனு: விரைவில் விசாரணை

சென்னை: பாமகவில் தந்தை-மகன் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இருவர் தரப்பிலும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்று கோரி பாமக நிறுவனர் ராமதாசால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 2022 மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே 30ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருகிறார். மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது என்று கடந்த ஜூலை ஏழாம் தேதி நடந்த மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது. செயல் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், குழப்பம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளார். தன்னைத்தானே தலைவர் என்று சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். கட்சி தலைவரும், நிறுவனருமான ராமதாசின் அனுமதியில்லாமல் அன்புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கெதிராக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 9ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் அன்புமணி அறிவித்துள்ளார். அன்புமணியின் இந்த அறிவிப்பால் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.