அமித்ஷாவிடம் எழுப்பிய பா.ஜ எம்பி கேள்வி வாபஸ்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
நாட்டில் தடயவியல் திறன்களை மேம்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மாநிலங்களவை பாஜ எம்.பி அதிய பிரசாத்,’புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட ஆதாரங்களை சேகரிக்க அரசாங்கம் மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகங்களை விரிவுபடுத்துகிறதா?’ என்று எழுப்பிய கேள்வியை விளக்கம் இல்லாமல் வாபஸ் பெற்றதை அடுத்து, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்தன.
அப்போது அவைதலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கேள்வியைத் தவிர்த்துவிட்டு அடுத்தவருக்குச் சென்றபோது, காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பலர் கேள்வி ஏன் திரும்பப் பெறப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அப்போது சி.பி. ராதாகிருஷ்ணன்,’உங்களுக்கு விதிகள் தெரியும். விதி 53 ஒரு உறுப்பினர் தனது விருப்பப்படி எந்தக் கேள்வியையும் திரும்பப் பெற அனுமதிக்கிறது. நீங்கள் விரும்பினால் அவையிலிருந்து விலகலாம். உறுப்பினர்களின் உரிமைகளில் நான் தலையிட முடியாது. சம்பந்தப்பட்ட எம்பியிடம் கேள்வியை எழுப்ப நான் ஏன் சொல்ல வேண்டும்? எனக்குச் சொல்ல உரிமை இல்லை. அது அவருடைய விருப்பம். நாளை சில கேள்விகளை நீங்களும் திரும்பப் பெறலாம், அதில் நான் தலையிட மாட்டேன்’ என்றார். இந்த பதிலில் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் வெளிநடப்பு செய்தனர்.
ஆம்புலன்ஸ்களுக்கு அவசர பாதைகள் வேண்டும்
இந்தியாவில் மளிகைப் பொருட்கள் 15 நிமிடங்களுக்குள் வீட்டு வாசலுக்குச் சென்றடைகின்றன, பீட்சாக்கள் 30 நிமிடங்களுக்குள் வருகின்றன, ஆனால் மருத்துவமனையை அடைவதில் தாமதம் காரணமாக நோயாளிகள் ரத்தம் கசிந்து இறக்கின்றனர். எனவே ஆம்புலன்ஸ்களுக்கு பிரத்யோக அவசர பாதைகள் வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி எம்.பி ஜெயா பச்சன் கோரிக்கை விடுத்தார்.
ஜின்னாவின் கல்லறையில் தலைவணங்கியவர்கள் எங்களுக்கு தேசபக்தியை கற்பிக்கக்கூடாது
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. சையத் நசீர் உசேன் பேசுகையில்,’ காங்கிரஸ் கட்சி நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் வந்தே மாதரத்தை பரப்ப உழைத்துள்ளது என்பது ஒரு வரலாற்று உண்மை. நாட்டில் பிறந்த ஒவ்வொரு இந்தியனுக்கும் தேசியவாதம் முக்கியம். இப்போது, ஜின்னாவின் கல்லறையில் தலை குனிந்தவர்கள் நமக்கு தேசியவாதத்தைக் கற்றுக்கொடுப்பார்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.
இந்தியாவில் தான் ரயில் டிக்கெட் விலை குறைவு
அண்டை மற்றும் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ரயில் டிக்கெட் விலைகள் மிகவும் மலிவு விலையில் உள்ளன, மேலும் டிக்கெட் விலைகளைக் குறைவாக வைத்திருக்க இந்திய ரயில்வே கடந்த ஆண்டு ரூ.60,000 கோடி மானியத்தை வழங்கியதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். வந்தே பாரத் ஸ்லீப்பர் சோதனைகள் நடைபெற்று வருகின்றன என்று எம்.பி.க்கள் தொடக்க காலக்கெடு கோரும் நிலையில் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில் வந்தே பாரத் ரயிலின் ஸ்லீப்பர் வகையில் இரண்டு ரயில் பெட்டிகள் தற்போது சோதனையில் உள்ளன என்று தெரிவித்தார்.


