அமெரிக்க அரசின் நிதி முடக்க நிலை: கட்டாய விடுப்பில் 6.70 லட்சம் அரசு ஊழியர்கள்; ஊதியமின்றி பணிபுரியும் 7.30 லட்சம் பணியாளர்கள்!!
வாஷிங்டன் : அமெரிக்க அரசின் நிதி முடக்க நிலை 35வது நாளை எட்டிய நிலையில், ஊதியம் கிடைக்காமல் ஊழியர்கள் பலர் கட்டாய விடுப்பில் சென்றுள்ளனர். ஆள் பற்றாக்குறை எதிரொலியாக முக்கிய துறைகளின் சேவைகள் முடங்கி உள்ளன. அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடிகளை காட்டி வருகிறார் டொனால்ட் டிரம்ப். குறிப்பாக உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு, குடியேற்றச் சட்டத்தில் கடுமை, 'எச் 1 பி' விசாவில் கெடுபிடி உள்ளிட்ட விவகாரங்களில் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரசுக்கு தேவையான நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், நிதி விடுவிப்பு தடைப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகி உள்ளனர். ஊழியர்கள் பலர் விடுப்பில் சென்றுள்ளதால் அத்தியாவசிய பணிகள் முடங்கியுள்ளன. தொடர்ந்து, 35வது நாளாக அரசு துறைகளுக்கு செலவழிக்க பணம் வழங்கப்படவில்லை.
கடந்த 2018-2019ல் ட்ரம்பின் முந்தைய ஆட்சியிலும் இது போல் நிதி முடக்கம் ஏற்பட்டது. அரசின் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவையும் முடங்கியுள்ளது. நிதி முடக்கத்தால் 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர். அமெரிக்காவில் 7.30 லட்சம் அரசு ஊழியர்கள் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.
