சோச்சி: இந்திய மக்கள் ஒருபோதும் அமெரிக்காவின் அவமதிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் விதித்துள்ள சூழலில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள சோச்சி நகரில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான நிகழ்வு நடந்தது. இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் புதின் பேசியது: “BRICS அமைப்பை நிறுவ உதவிய இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு ரஷ்யா நன்றியுடன் உள்ளது. இந்த நாடுகள் பக்கச்சார்பாக செயல்பட மறுத்து, உண்மையிலேயே ஒரு நியாயமான உலகத்தை உருவாக்க விரும்புகின்றன.
எனது இந்திய பயணத் திட்டத்தை எதிர்நோக்கி உள்ளேன். இந்தியாவுடன் எங்களுக்கு எப்போதும் சிக்கல் இருந்ததில்லை. நிச்சயம் அயலக அழுத்தங்களுக்கு இந்திய தேசம் அடிபணியாது. அது மாதிரியான நகர்வை பிரதமர் மோடி அனுமதிக்கமாட்டார். இந்திய மக்கள் ஒருபோதும் அமெரிக்காவின் அவமதிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தியா மீதான ட்ரம்ப்பின் வரி விதிப்புகள் அமெரிக்காவிற்கே பின்னடைவாக அமையும். இந்திய தேசம் ரஷ்யாவில் இருந்து எரிசக்தி பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் சுமார் 9 பில்லியன் முதல் 10 பில்லியன் டாலர்கள் வரை ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்படும்.அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ரஷ்யா ஈடு செய்யும். அந்த வகையில் இந்தியாவில் இருந்து விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை ரஷ்யா வாங்கும். இதோடு நட்பு நாடு என்ற அந்தஸ்தும் இருக்கும். ” என்றார்.