சென்னை: சென்னையிலுள்ள அமெட் கடல்சார் பல்கலைக்கழகமும், ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு கடல்சார் பல்கலைக்கழக கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் 25ம் ஆண்டு பன்னாட்டு கருத்தரங்கத்தின் தொடக்க விழா, மாமல்லபுரம் ராடிசன் புளு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. கடல்சார் தொழில்களில் புதிய வரவுகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள், என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் 42 நாடுகளில் இருந்து 93 கடல்சார் பல்கலைக்கழகங்களை சேர்ந்த 162 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
கருத்தரங்க தொடக்கவிழாவில் கூட்டமைப்பின் தலைவரும், சீனாவில் உள்ள டேலியன் பல்கலைக்கழகத்தின் தலைவருமான முனைவர் ஷான், தலைமை உரையாற்றினார். அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் ஜே.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இந்திய அரசின் கப்பல்துறை, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கடல்துறையின் இயக்குநர் ஜெனரல் ஷியாம் ஜெகநாதன் தொடக்க உரையாற்றினார். ஜப்பான் நாட்டின் நிப்பான் அறக்கட்டளை தலைவர் தக்கேஜு ஒகாடா மாநாட்டில் தொடக்க உரை, கருத்துரை வழங்கினார். மேலும், பன்னாட்டு கடல்சார் பல்கலைக்கழக கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் டகேஷி சிறப்புரையாற்றினார்.