உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் திருவிழா நடந்து முடிந்துள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பிடித்துள்ளது. இதில் பாஜ தனிக்கட்சியாக 242 இடங்களை பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 233 இடங்களை பெற்றுள்ளது. பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்க தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், லோக் ஜன சக்தி, ஜனசேனா ஆகிய கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளார். இவர்களும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க ஆதரவளிப்பதாக உறுதி அளித்துவிட்டனர்.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜவிடம் சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அதன்படி ஒன்றிய அமைச்சரவையில் கேபினட் அந்துஸ்து கொண்ட முக்கிய துறைகளான நிதி, ரயில்வே, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அமைச்சர் பதவியை கேட்டுள்ளார். அதே போல் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, குறைந்தபட்ச பொது செயல் திட்டம் 3 கேபினட் மற்றும் 2 இணை அமைச்சர்கள் பதவி ஒதுக்க வேண்டும் என நிபந்தனையாக முன்வைத்துள்ளார்.
கர்நாடகாவில் 2 இடங்களில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தள மாநில தலைவர் குமாரசாமி தனக்கு ஒன்றிய அமைச்சரவையில் வேளாண் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். மேலும் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியும் நிபந்தனை விதித்துள்ளது. இதனால் பாஜ அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இவர்களது நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் பாஜ இருக்கிறது. இவர்களது அனைத்து கோரிக்கையும் ஏற்க முடியாவிட்டாலும் ஒருவாறு அவர்களை சமாதானப்படுத்த முக்கிய துறைகளை ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் உணர்ச்சி வசப்படக்கூடியவர். கூட்டணியில் சிறிய கவுரவ குறைச்சல் ஏற்பட்டாலும் தடாலடியாக வெளியேறிவிடுவார். இவர் ஏற்கனவே பாஜ கூட்டணியில் இருந்து விலகி இந்தியா கூட்டணி அமைவதற்காக துவக்க புள்ளியாக இருந்து, மீண்டும் பாஜவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர். இதனால் மோடியின் தலை மேல் தொங்கும் கத்தி என்று இவரை உறுதியாக கூறலாம். அடுத்ததாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. மோடி பிரதமராக இருந்த போது சந்திரபாபு நாயுடுவை பல தருணங்களில் அசிங்கப்படுத்தினார். அதுமட்டுமின்றி அமித்ஷா மிக கடுமையாக விமர்சித்த சம்பவங்களும் நடந்தேறின. இவை எல்லாம் வடுவாக அவர் மனதில் இருக்கும். எனவே இவர்களது அவமானத்தை இனிமேல் அவரால் சகித்துக்கொள்ளவும் முடியாது.
அதற்கு அவசியமும் இ்ல்லை. அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் கூட்டணியை விட்டு வெளியேற தயங்கவேமாட்டார். இப்படி நிலையில்லாத கூட்டணி நிபந்தனையின் பேரில் அமைக்கும் ஆட்சி நிரந்தரமாக நிலைக்குமா என்பது கேள்விக்குறிதான். சுயேச்சைகளின் ஆதரவை கோரியுள்ள பாஜ கடந்த காலங்களை போன்று மாநில கட்சிகளை உடைப்பது, ஆபரேஷன் தாமரை ஆயுதத்தை கையில் எடுப்பது ஆகிய குறுக்குவழியை யோசித்தால் மிகப்பெரிய சரிவைத்தான் சந்திக்க நேரிடும். இதற்கு உதாரணமாக தற்போது மகாராஷ்டிராவில் நடந்து வரும் அரசியல் நகர்வுகள் பாஜவுக்கு தகுந்த பாடத்தை கற்று கொடுத்துள்ளது. எனவே மோடி வளைந்து கொடுத்து சென்றால் பதவியில் நிலைக்கலாம். ஆணவம் அழிவைத்தான் தரும் என்று உணர வேண்டும்.