கீழ்பென்னாத்தூர்: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தில் நேற்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ கூட்டணியில் இருக்க யாரும் விரும்பவில்லை. ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டதாகவும், ஆனால் அவரை சந்திக்க விடவில்லை எனவும் தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வம் நல்ல அரசியல் தலைவர். 2 முறை தமிழக முதல்வராக பொறுப்பு வகித்தவர்.
அவருக்கு தன்மானம் இருப்பதால் கூட்டணியை விட்டு வெளியே வந்திருப்பார். இப்போது அதிமுக எடுத்துள்ள முடிவு தான் வரலாற்றில் பெரும் பிழை. பாஜவுடன் கூட்டணி வைப்பதனால் என்ன வரப்போகிறது. எங்களுடைய கூட்டணி எப்போதோ முடிவு செய்யப்பட்டுவிட்டது. அது எட்டு கோடி மக்களுடையது. இன்னும் சில மாதங்களில் தமிழ் இனவளர்ச்சி தேசிய எழுச்சி மாநாடு நடத்தப் போகிறோம். அந்த மாநாட்டில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பதை அறிவிப்போம். இவ்வாறு சீமான் கூறினார்.