அலையாத்தி காடுகள், கடல்சார் கல்லூரி குறித்து விஜய் பேசியது தவறான தகவல்: பட்டியலிட்டு விளக்கம் கொடுத்த தமிழ்நாடு அரசு
சென்னை: அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி குறித்து விஜய் பேசியது தவறான தகவல் என்று பட்டியிலிட்டு தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகப்பட்டினத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அலையாத்திக் காடுகளைக் காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கடல்சார் கல்லூரி எதுவும் நாகையில் இல்லை என்றும் பேசியிருந்தார்.
இந்த நிலையில் விஜய் பேசியது தவறான தகவல் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தவறான தகவல்கள்.
* தவறான தகவல் 1: “மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்மை: தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள், அலையாத்திக் காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அரசின் முயற்சியால் கடந்த 2021ம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்தவை இன்று 90 சதுர கிலோமீட்டராக பெருகியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன.
* தவறான தகவல் 2: கடல்சார் கல்லூரி ஏதும் நாகப்பட்டினத்தில் இல்லை.
உண்மை: தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது.
* தவறான தகவல் 3: மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அனுமதி இல்லை என்கிறார்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா?.
உண்மை:சென்னையில் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி பிரதமரின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது. தவறான தகவல்களைப் பரப்பாதீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.