Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தெலங்கானா மாநிலத்தில் அகிலேஷ் - கே.டி.ராமாராவ் திடீர் சந்திப்பு ஏன்? தேர்தல் வெற்றி, தோல்வி குறித்து பரபரப்பு கருத்து

ஐதராபாத்: சமாஜ்வாதி கட்சியைப் போலவே பிஆர்எஸ் கட்சியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் என்று அகிலேஷ் யாதவுடனான சந்திப்பிற்குப் பிறகு கேடிஆர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியை இழந்தது. அதேவேளையில், உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் சறுக்கலைச் சந்தித்தாலும், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களைக் கைப்பற்றி சமாஜ்வாதி கட்சி பெரும் சக்தியாக உருவெடுத்தது. இந்நிலையில், ஐதராபாத் வந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவை (கேடிஆர்) நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது பேசிய கேடிஆர், ‘சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்தில் 37 எம்பிக்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாகத் திகழும் உங்களையும், உங்கள் கட்சியையும் பார்க்கும்போது எங்களுக்கு உத்வேகம் பிறக்கிறது. நாங்களும் மீண்டும் எழுச்சி பெற்று ஆட்சியைப் பிடிப்போம்’ என்று தெரிவித்தார். பிஆர்எஸ் கட்சித் தலைவர் கே.சந்திரசேகர ராவின் (கேசிஆர்) உடல்நலம் குறித்து விசாரித்த அகிலேஷ் யாதவ், இது அரசியல் தாண்டி தனிப்பட்ட முறையிலான நட்பு ரீதியான சந்திப்பு என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், ‘அரசியலில் வெற்றி தோல்வி என்பது காலச் சக்கரம் போன்றது; மக்களுடன் தொடர்பில் இருந்தால் மீண்டும் ஆதரவைப் பெறலாம்.

பிரித்தாளும் எதிர்மறை அரசியலை விடுத்து, வளர்ச்சி மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நேர்மறையான அரசியலே தற்போதைய தேவை’ என்று வலியுறுத்தினார். முன்னதாக அகிலேஷ் யாதவ் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகிலேஷ் யாதவ், இந்தியா கூட்டணியில் அங்கம்வகிக்காத மற்றும் பாஜகவுக்கு எதிரான நிலைபாட்டில் இருக்கும் பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவை சந்தித்தது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.