Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நிராகரிப்பு: குறைகளை நீக்க மதுரை நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரித்துள்ள மதுரை நீதிமன்றம், குறைகளை நீக்கி, திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார்(28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு மற்றும் சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஆக.20ம் தேதி சிபிஐ தரப்பில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை, மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஏற்கனவே கைதான 5 பேருடன், தனிப்படையினரின் வாகன டிரைவர் ராமச்சந்திரன் 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த முதல்கட்ட குற்றப்பத்திரிகையை நிராகரித்த நீதிபதி செல்வபாண்டி, சிபிஐ விசாரணை அதிகாரியான டிஎஸ்பி மோகித் குமாருக்கு அதனை திருப்பி அனுப்பி வைத்துள்ளார். அதில், சிபிஐ தாக்கல் செய்த முதல்கட்ட குற்றப்பத்திரிகையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. குறைகளை சரி ெசய்து, தேவையான திருத்தங்களை மேற்கொண்டு முழுமையான குற்றப்பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்ய வேண்டுமென அதில் கூறியுள்ளார். இதையடுத்து தேவையான திருத்தங்களுடன் மீண்டும் புதிதாக முதல் கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.