மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரி போலீஸ் காவலில் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக பலரிடம் அதிகாரிகள் விசாரணையை ஒன்றுக்கு இருமுறை முடித்து உள்ளனர். இந்நிலையில், அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்ட நிகழ்வை செல்போனில் வீடியோ எடுத்த சக்தீஸ்வரனிடமும் ஏற்கனவே 2 முறை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். நேற்று 3வது முறையாக சக்தீஸ்வரன், மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 2 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையிலுள்ள தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று அழைத்து வரப்பட்டு காவல் நீட்டிப்பிற்காக மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி செல்வபாண்டி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 5 பேரின் நீதிமன்ற காவலையும் ஆக. 13 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.