மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் கடந்த மாதம் 28ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், மதுரை மற்றும் சிவகங்கை கலெக்டர்கள், எஸ்பிகள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘‘எனது சகோதரரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது இறப்புச் சான்றிதழ் கேட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்தை அணுகினோம்.
அஜித்குமார் இறப்பு தொடர்பான ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ளதால், அதனை பெற்று வந்து மனு செய்து பின்னர் இறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இறப்பு தொடர்பான ஆவணங்கள் எதுவும் திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்து எங்களுக்கு வழங்கவில்லை. எனவே, எனது சகோதரர் அஜித்குமாரின் இறப்புச் சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இதனிடையே அஜித்குமாரின் இறப்புச் சான்றிதழ் அவரது குடும்பத்தினரிடம் விஏஓ மூலம் நேற்றுமாலை வழங்கப்பட்டது.