Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சட்ட நுணுக்கங்களை ஆராயாமல் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை நம்பி மனுத் தாக்கல்: கேரள உயர்நீதிமன்றம் கவலை

கொச்சி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி, சட்ட நுணுக்கங்களை ஆராயாமல் மனுத் தாக்கல் செய்யும் வழக்கறிஞர்களின் செயல்பாடு கவலையளிப்பதாக கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள உயர் நீதிமன்றம் ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் முதல் சாட்சிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய ‘அதாலத்.ஏஐ’ எனும் மென்பொருளைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. மேலும், ஜூலை மாதத்தில் நீதித்துறை செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் போது மனிதக் கண்காணிப்பு அவசியம் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும், சமீபகாலமாக வழக்கறிஞர்கள் பலர் சட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாமல், முழுவதுமாக செயற்கை நுண்ணறிவு செயலிகளை (ஏஐ) மட்டுமே நம்பி மனுக்களைத் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் மனுக்களில் போதிய உண்மையான தகவல்கள் இருப்பதில்லை என்றும், விசாரணையின் போது நீதிபதிகள் கேட்கும் கேள்விகளுக்கு வழக்கறிஞர்களால் உரிய பதிலளிக்க முடிவதில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இணையவழி நிதி மோசடி தொடர்பாக முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை விடுவிக்கக் கோரிய வழக்கை விசாரித்தபோது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த மனுவில் வணிகப் பரிவர்த்தனை தொடர்பான அடிப்படை விவரங்கள் கூட இல்லாமல், செயற்கை நுண்ணறிவு மூலம் பொதுவான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டிருப்பதை நீதிபதிகள் கண்டறிந்தனர். இது குறித்து நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், ‘தொழில்நுட்பம் என்பது மனித முயற்சிக்குத் துணையாக இருக்க வேண்டுமே தவிர, அது மனிதர்களின் உழைப்பையும், தொழில்முறை கடமையையும் முழுவதுமாக மாற்றியமைக்கக் கூடாது’ என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், மோசடியான வழக்குகளைத் தடுக்கும் வகையில், வங்கிக் கணக்கு தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியையும் எதிர்மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.