Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காற்றழுத்த தாழ்வு மண்டலம் 4 மாவட்டங்களில் கனமழை

சென்னை: வங்கக் கடலில் கடந்த இரண்டு நாட்களாக நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதை அடுத்து, தமிழகத்தில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இருப்பினும் ஒரு சில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் நிலவியது. சென்னை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், வேலூர், மாவட்டங்்களில் நேற்று இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வ லுப்பெற்றது. அது வட மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டது. பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று காலையில் கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் ெ தாடர்ச்சியாக நாளை முதல் அக்டோபர் 2ம் தேதி வரையும் இந்த நிலை நீடிக்கும். சென்னையில் இன்றும் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.  இது தவிர, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60கிமீ வேகத்தில் இன்றும் நாளையும் வீசும். இதேநிலை 30ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.