சென்னை: மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று முன்தினம் உருவானது. இதையடுத்து, அது நேற்று காலையில் வட மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது இன்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா பகுதிகளை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால், நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் நேற்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 20ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரியாக இருக்கும்.