சென்னை: புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருந்து வருபவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி. இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்தும் அவருக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக நுழைவாயில் அருகே கடந்த 6ம் தேதி நின்றுகொண்டிருந்த அவரை சுற்றி வளைத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கியதாகவும், இதனையடுத்து ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்தனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மெரினா கடற்கரை காவல்துறை ஏர்போர்ட் மூர்த்திக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பிறப்பித்து சென்னை காவல்துறை ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.