Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏர்போர்ட்-திரிசூலம் ரயில் நிலையம் -மெட்ரோ ரயில் நிலைய இணைப்பு சுரங்கப்பாதையில் அடிக்கடி மின்தடை; லிப்ட் பழுதால் பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையம்- திரிசூலம் ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் நீளமான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை, சென்னை- திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து, சென்னை விமான நிலையத்திற்கும், மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் இணைப்பு பாதையாக உள்ளது. இதை விமான நிலைய பயணிகள், ஊழியர்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. பின்னர் மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலைய வளாகத்துக்குள் அமைந்துவிட்டதால், மெட்ரோ ரயில் பயணிகளும்பயன்படுத்துகின்றனர்.

தற்போது இந்த சுரங்கப்பாதையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. அந்த நேரங்களில் பயணிகள், தங்களது செல்போனில் உள்ள டார்ச் லைட்டை ஒளிர செய்து பயணிக்கின்றனர். மேலும் பல விளக்குகள், எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பல விளக்குகள் பழுதடைந்து தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் விளக்குகளை தண்ணீர் குழாயில் கட்டி வைத்திருக்கும் நிலையில், எரிந்து கொண்டிருக்கின்றன. சிறுவர்கள் யாராவது, விளையாட்டு தனமாக தொட்டால், மின்சாரம் பாய்ந்து உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். மின் வயர்கள் ஆங்காங்கே தொங்கி கொண்டிருக்கின்றன.

மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால், மின்கசிவு ஏற்பட்டு பயணிகளுக்கு, பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் 2 ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக விமான நிலைய ஊழியர்கள் ஷூக்கள் அணிந்து செல்லும்போது, தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த சுரங்கப்பாதையில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. அது செயல்படாமல், காட்சி பொருளாக இருக்கிறது. எனவே மழைக்காலத்திற்கு முன்னர், மின் வயர்கள், மின்விளக்குகள், லிப்ட் உள்ளிட்டவற்றை சரி செய்ய வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.

இது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறை தரப்பினர் கூறுகையில், இந்த சுரங்கப்பாதை பராமரிப்பு பணியை, தனியார் ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். அவர்கள், மழைக்காலத்துக்கு முன்பாக அனைத்து பணிகளையும் செய்து முடித்து விடுவார்கள்’ என்றனர்.