Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னையில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், நேற்று மாலை 5.55 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் 152 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 158 பேர் இருந்தனர். விமானம் இரவு 8.40 மணிக்கு சென்னையில் தரை இறங்கவேண்டும். அதன்படி டெல்லி-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று இரவு 8.30 மணியளவில் சென்னை விமான நிலைய வான்வெளி பகுதிக்கு வந்தது. ஆனால் தரையிறங்க அந்த விமானத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் வானில் வட்டமடித்து அரை மணி நேரத்திற்கு மேலாக பறந்தது. பின்னர், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை பெங்களூருக்கு திருப்பி அனுப்பினர்.

இதனால் ஏர் இந்தியா பயணிகள் விமானம் பெங்களூரில் நேற்று இரவு 9.35 மணிக்கு தரை இறங்கியது. சென்னையில் விமானம் தரை இறங்குவதில் என்ன பிரச்னை? என்ற கேள்விக்கு இதுவரையில் பதில் அளிக்கவில்லை. இதனிடையே, ஏர் இந்தியா பயணிகள் விமானம், டெல்லியில் இருந்து சென்னைக்கு இரவு 8.40 மணிக்கு வந்துவிட்டு மீண்டும் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த விமானத்தில் நேற்று இரவு டெல்லி செல்ல 160 பயணிகள் காத்திருந்தனர். இவர்கள் நேற்று இரவு 8 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையம் வந்து பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். ஆனால், பயணிகளுக்கு விமானம் தாமதம் என மட்டுமே அறிவிக்கப்பட்டது. எதற்காக விமானம் தாமதம்? எப்போது சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்லும்? என எதுவும் அறிவிக்கவில்லை. இதனால் பயணிகள் தவித்தனர்.

இதற்கிடையே பெங்களூர் சென்றிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், நேற்று இரவு 11.30 மணி அளவில் 152 பயணிகளுடன் 4 மணி நேரம் தாமதமாக சென்னை வந்தது. இதில், சென்னையில் இருந்து டெல்லி செல்ல காத்திருந்த 160 பயணிகளும் ஏற்றப்பட்டு இன்று அதிகாலை 1.30 மணிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் டெல்லியில் இருந்து சென்னை வந்த 152 பயணிகளும், சென்னையில் இருந்து டெல்லி சென்ற 160 பயணிகளும் என 312 பயணிகள் நள்ளிரவில் சென்னை விமான நிலையத்திலும், பெங்களூரு விமான நிலையத்திலும் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.